Press "Enter" to skip to content

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

எம் சிந்தையைக் கவர்ந்த

கல்வித் தந்தை!


சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,


சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!


உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;


உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!


சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;

நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;

வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;

மசியா மனிதரை மசிய வைப்பார்!


திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்

குட்டினால் அனுபவம்! இவைகளின்

சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்

சொந்தக்காலில் நின்ற செயலாளர்!


மடிக் கணினி வரு முன்னரே

மடியில் வைத்துத் தட்டச்சில்,

பணி ஆணைகள் பல அச்சிட்டு,

படித்தோர்க்குப் பலன் தந்தார்.


ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்

ஆளுமையில் அடங்கும் துறைகள்;

கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்

மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!


வாசகமொன்று இவர் எழுதிடின்,

வக்கணை பேச யாருளர்? பிறர்

வாசகத்தை இவர் திருத்திடின்,

வாய்திறந்து மறுப்போர் யாருளர்?


அலுவலகங்களுக்கு ஓர் உடை,

விழாக்களுக்கு என்று ஓர்உடை,

பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை

என்ற வழக்கம் உடையாரல்லர்!


யாவும் உடையார்க்கு உயருடையா?

பயமே அறியார்க்குப் படை பலமா?

தளரா நடையே போதும் அவருக்கு,

அடையா இலக்கை அடைவதற்கு!


நீட்டோலை வாசியா நின்றவரை,

ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!

படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,

பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.


பட்டறிவில்லா எம் போன்றோரை,

பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!

அறிவுரைகளால் அதட்டி என்னை

முது கலையை அடைய வைத்தார்!


ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;

ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்

பதவி நெருங்கும் வரை அவர்

அன்பில் எம் முயர்வு இருந்தது!


பரவட்டும் தாளாளர் புகழொளி

பாரெல்லாம்! வல்ல இறைவன்,

புவனப் பதவி பல தந்தவருக்கு

சுவனப் பதவியை வழங்கட்டும்!


A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)

முன்னாள் மாணவர், முது கலைப்

பட்டதாரி ஆசிரியர்,

காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி

© Copyright 2024, Ecommerce Business Bureau | Privacy Policy
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.